ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் ஒரு உபரியின் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு
ஒரு உபரியின் கவிதைகள்
குமரகுரு அன்பு
நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி
64 பக்கங்கள்
காக்கை பிரதிகள் வெளியீடு
முதற் பதிப்பு ஜூன் 2020
விலை ரூ 60.
வாழ்வெங்கும் விரவியிருக்கும் கீழ்மையையும் சுரண்டலையும் காணும் ஒரு சாதாரண மனிதனின் எதிர்வினை எப்படி இருக்க முடியும். அவலங்களை மறுத்து வாழ்வின் மேலானதெனக் கருதும் சில தருணங்களின் நிழலில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனும் போதையில் நிகழ்வினை மறந்து கனவுகள் காணலாம். இல்லையெனில், உண்மையின் வேள்வித் தீயின் உட்புகுந்து அழிக்க முனைந்து தானும் அழிந்து போகலாம். ஆனால் இவ்விரண்டு தேர்வுகளுமே வாழ்வின் இரு முரண் எல்லைகள். இந்த விருப்பங்கள் சாதாரணனுக்கு கைகூடுவது இல்லை. வாழ்வின் நிதர்சனங்களோடு சமரசம் புரிந்து அதன் அழுத்ததில் வாழ்ந்து மடிவது தான் அவனுக்கு வாய்க்கிறது. ஆனால் ஒரு படைப்பாளி இந்த அழுத்தத்தினைத் தன் கலைகளில் வெளிப்படுத்தி ஆசுவாசம் கொள்கிறான். குமரகுரு அன்புவின் 'ஒரு உபரியின் கவிதைகள்' இது போன்றவோர் இயலாமையின் வெளிப்பாடாக, எப்படியாவது இந்நிலையினை மாற்றும் வழி விரும்பி அலையும் ஆன்மாவின் குரலாக ஒலிக்கிறது.
இந்த உலகில் உபரியாக வாழ்ந்து மடியும் என்னைப் போன்றவர்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்பட்டு இருப்பதிலிருந்தே வாசிப்பிற்கான தளம் அமைக்கப்பட்டுவிடுகின்றது. அது
பெரிய மரம் ஒன்று,வேரை பூமிக்கு அடியிலும், கிளைகளை வானிலும் பரப்பி நின்று கொண்டிருக்கிறது. அதன் கீழே ஒரு சிறிய புல், எதற்காகவோ முளைக்கிறது.
எனும் வரிகளை முன்னுரையில் வாசிக்கும்பொழுது தொகுப்பின் தலைப்பு ஏற்படுத்தும் எண்ணங்களை உறுதிப்படுத்தி வாசிப்பிற்கான சரியான மனநிலைக்குத் தயாராகி விடுகிறோம்.
ஒரே ஒரு மிருகம் மட்டும்தான்,
அத்தனையையும் தனதாக்கிக் கொள்ள
வேண்டுமென்ற பேராசையுடன்
ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
பற்றாக்குறையை ஏற்படுத்தும் மிருகம்
இந்தப் பற்றாக்குறையை வணிகமாக்கி
லாபத்தில் புரள்கிறதந்த மிருகம்!
என முன்னுரை நீளும்பொழுது கவிதைகள் சுட்ட விழையும் சமுதாயப் பார்வையினை நம்மால் உணர முடிகிறது.
ஒவ்வொரு வரியாகப் பிரித்து
நுழைத்துக் கோர்த்துக்கொண்டிருந்தேன்
சுவரிலிருந்து மூச்சுவாங்க
என்னையே பார்த்துக்கொண்டிருந்த
பல்லியின் நாவைப் பிடுங்கி
அழுத்தி ஒட்டினேன்
சொற்களைப் பிடிக்க ஏதுவாயிருந்தது
மெல்ல தடவப்படும் மிருதுவான ரோமங்களைக்
கொண்டு மூடியபின்
சொற்றொடர்களை உடைக்கத் துவங்கினேன்
முட்டைகளுக்குள்ளிருந்த
மஞ்சள் கருவிலே சிறு இதயம்
துடித்துக்கொண்டிருந்தது.
என, தான் கவிதை செய்யும் நுட்பத்தினை கவிஞன் முன் வைக்கும் பொழுது அச்சிறு இதயம் தொடர்ந்து துடித்து வளர்ந்து வளமுடன் வாழ வாழத்தாமலிருக்க முடியாது. விரல்களைப் பற்றியபடி நடை பழக்கும்பொழுதே தந்தை தனக்குச் சொன்ன, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த, கதையினை தன் மக்களுக்கு சொல்லப் போவதில்லை எனும் உறுதியினைக் கவிதை சொல்லுகையில் அடுத்த தலைமுறையாவது மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு ஒரு சுரண்டலற்ற உலகினைப் பார்க்காதா எனும் கவிஞரின் ஆதங்கம் நம்மையும் வருத்துகிறது.
ஏவி விட்ட வேலையெல்லாம் செய்பவனை கூலியால் ஏமாற்றியதன்
நியாயத்தினைக் கேள்விக்கு உள்ளாக்கும் இக்கவிதை உரிமைக் குரல்களில் வித்தியாசமாக ஒலிக்கிறது.
காதலைப் பாடாத கவிஞன் இல்லை; ஆனால் அதிலும் தன் இயலாமையினையே சொல்லும் இந்தக் கவிதை நிச்சயம் மாறுபட்டது.
கொட்டகைக் கொம்பில்
கட்டிய பின் பசு
விழி பிதுங்க
எதையோ மென்றபடி
உன் கண்களையே
பார்த்தது தெரியுமா?
அப்படி எனக்குப் பார்க்க
தெரியாது அன்பே...
வாழ்விற்காகக் கையேந்துபவனிடம் சயனைடையும் வாழ்விழந்து நிற்பவனுக்கு நெற்றிப் பொட்டில் தோட்டாவையும் தந்து விட்டு யுத்தம் தரும் விடுதலையைக் கொண்டாடும் மனப்பாங்கினை கேலி செய்கிறது ஒரு கவிதை. துப்பாக்கியிலிருந்த ரேகை தண்டிக்கப்பட்டவனின் கையிலில்லாததைக் குறிப்பிட்டுச் சொல்கிறது இன்னொன்று. வயிற்றில் பசியோடு இருக்கும் வயோதிகப் பரத்தையின் காத்திருப்பினைச் சுட்டுகிறதுவேறொன்று. இப்படிப் பாடு பொருளின் பன்முகத்தன்மையினால் கவனத்தை ஈர்க்கின்றன குமரகுரு அன்புவின் இத்தொகுப்பிலுள்ள படைப்புகள். இயலாமையில் தவிக்கும் மூர்க்கத்தின் வெளிப்பாடாக பலவந்தமாகவேணும் விரைவில் ஒரு மாற்றம் வந்தே தீர வேண்டும் எனும் விழைவின் குரலாக அமைந்திருக்கின்றன இந்தக் கவிதைகள்.
ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->

❤️👍
ReplyDelete❤
Delete