Skip to main content

நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் Louise Gluck அவர்களின் A fantasy எனும் கவிதை என் மொழிமாற்றத்தில்

ஒரு கனவு

லூயிஸ் க்ளக்
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி


நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்:
தினமும் யாராவது இறக்கிறார்கள்.
அது ஒரு ஆரம்பம் மட்டும் தான்.
ஒவ்வொரு நாளும் மயானங்களில்
புதிதாக விதவைகள் பிறக்கிறார்கள்,
புது அனாதைகள்.

அவர்கள் தலையினை கையில் தாங்கி அமர்ந்திருக்கிறார்கள்,
தங்கள் புது வாழ்வினை முடிவு செய்ய முயன்றபடி.
அவர்களில் சிலர் முதல் முறையாக வருகிறார்கள்
மயானத்திற்கு.
அவர்கள் அழக்கூட பயந்தவர்களாயிருக்கிறார்கள்,
சில நேரங்களில் அழாமலிருப்பதற்கும்.
யாரோ அவர்களின் காதில் கிசுகிசுக்கிறார்கள்
அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று,
சில மந்திரங்களை உச்சரிக்க அல்லது
திறந்திருக்கும் குழியில் ஒரு பிடி மண் அள்ளிப்போட.

அதன் பிறகு
அனைவரும் அவள் வீட்டிற்கு வருகிறார்கள்,
திடீரென வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள்.

விதவை கட்டிலில் அமர்ந்திருக்கிறாள்,
வெகு பாங்காக,
வந்தவர்கள் வரிசையாக அவளிடம் வரத் தோதாக,
சிலர் அவள் கையினை பற்றிக்கொள்கின்றனர்,
சிலர் மென்மையாக அணைக்கின்றனர்.

அவளிடம் அனைவருக்கும் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது,
நன்றி, உதவிக்கு நன்றி.
அவள் நெஞ்சினுள்,
அவர்கள் அனைவரும்
சீக்கிரம் போய்விடமாட்டார்களா என ஏங்குகிறாள்.

அவள் திரும்பிப் போக விரும்புகிறாள்,
மயானத்திற்கு,
அவன் நோய்பட்டுக் கிடந்த அந்த அறைக்கு,
அந்த மருத்துவமனைக்கு.

அவளுக்குத் தெரியும் அது முடியாதென்று.
ஆனால் அது ஒன்று மட்டும் தான்
அவளுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது,
காலத்தை பின் நகர்த்தும் ஆசை.
ரொம்பவும் வேண்டாம்
கொஞ்சம்,
கல்யாணம் வரை இல்லை,
முதல் முத்தம்.

Comments

  1. அருமை அரவிந்த்.
    தொடரட்டும் இதே போன்ற முயற்சிகள்.

    ReplyDelete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...