பாபேல் - கவிதை - மலையாள மூலம் :கல்பட்டா நாராயணன்-(അച്ഛനും മകളും)-தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி



அப்பா:
மொபைல் மார்போடணைத்துறங்கும்
மகளின் முகத்தின் நிறைவு
என்னை பயம் கொள்ளச் செய்கிறது.
எந்த ஒரு மரத்திலும் நிலத்திலும் நிலைக்காத என் பலசெல் உயிரி
ஒரு செல் உயிரியாக
தனக்குள் முடங்கிக் கொண்டதோ?
பல காலத்து அலைச்சலுக்குப் பின்
துவக்கப் புள்ளிக்கே திரும்பி வந்ததோ?
பற்பல ஜன்மங்களினூடே அப்பா காண்கிறேன்
பயன்பாடு குறைந்து குறைந்து
உன் கைகால்கள் மெலிந்து வருவது!
ஒரு விரலும் துடிப்புமாக
நீ சுருங்குவது.
அண்மைக்காலமாக நான் பார்க்கிறேன்
நீ நடக்காமலே உன் வேலைகள் நடப்பது
வகுப்புக்குச் செல்லாமலே தேர்வுகளில் நீ வெல்வது
வங்கிக்குச் செல்லாமலே வர்த்தகம் செய்வது.
நெருப்பின்றி
நீரின்றி
நெல் இன்றி சமைப்பதும்,
விதைக்காமல் அறுப்பதும்,
எங்கேயும் செல்லாமல் எங்கும் இருப்பதும்.
எல்லாமும் எதுவுமில்லாமல் நடக்கின்றன.
இருந்த இடத்திலிருந்தே உறவு பூணுகிறாய்
இருந்த இடத்திலிருந்தே உறவு முறிக்கிறாய்
பொது இடங்களை வெறிச்சோடச் செய்கிறாய்
பாட்டரங்குகளை மோனத்தில் மூழ்கடிக்கிறாய்
உழைப்பை உதாசீனம் செய்கிறாய்
எச்சிலாய்ப் போன காலத்தை
துச்சமாய்ப் போன தூரத்தை
விரலால் சுண்டி விசிறுகிறாய்.
என்ன பொருள் இதற்கெலாமென் கண்மணி?
நெஞ்சிலிருப்பது அலாவுதீனின் அற்புத விளக்கு
ஆணையிட வேண்டாம்
வெறுமனே தொட்டாலே போதும்.
நெஞ்சிலிருப்பது எந்தக் கொடிய பசியினையும் போக்கும்
பல -அதிபல மந்திரம்
மெதுவாக மந்திரித்தாலே போதும்.
மகளே நீ ஊக்கம் குறைந்தாயோ?

மகள்:
அடுத்த பாதையில் வண்டி வருகிறதா என
கவனமாய்ப் பார்த்து கடக்கையில்
இந்தப் பாதையில் வந்த இரயில் மோதி
சிதறிப் போன பாவம், என் அப்பா.
பாருங்களேன்
தூக்கம் வராமல் புரண்டு தவிப்பதை.
அப்பா, வாழ்க்கை ஒரு கடமையல்ல.
சுருங்குகிறது என் தலை, கால மாற்றத்தினால் என
கவலைப்பட்டீர்கள் தானே.
தலை, தலை தப்புகிறது.
தலையை விட பெரிய தலை என் கையில் உள்ளது.
இன்று காலை
குடும்பத்தினர் எல்லோரையும் அடக்கி
நானெடுத்த செல்ஃபி கண்டு அப்பா நீங்கள் பெருமூச்செறிந்தீர்கள்.
குடும்பப் படத்தில்
உங்கள் உடம்பில் ஒட்டியிருக்கும்
உங்கள் மார்பளவே வளர்ந்திருக்கும்
என்னை எண்ணித் தானிருக்கும்.
செல்ஃபியில் நான் தான் பெரிது.
எனக்கப்புறம் தான் மீதி அனைவரும்.
என் வாழ்வில் உங்களுக்கெல்லாமிருக்கும் நிஜமான இடமும் அவ்வளவு தான்.
ஆம் அப்பா
உங்கள் மகள் ஊக்கம் குறைத்து விட்டாள்.
என் வழியின் தூரம் கூட்ட நீங்கள் தாண்டிய பாதை வேண்டாம்,
உங்களின் முன் பாக்கிகள் என் ஆஸ்திகள் அல்ல.
வாழ சபிக்கப்பட்டவர்கள், நீங்கள்
வாழ்க்கையினால் விடுதல் பெற்றவர்கள் நாங்கள்.
ஒன்றும் நடக்கவில்லை என புலம்ப வேண்டாம்
நீங்கள் நடந்தவை கொண்டு நாங்கள் நடனம் புரிகிறோம்.
வீணானவற்றின் உயிரறுப்பது மட்டுமல்ல
வேண்டியவைகளில் உயிர் துடிக்கவும் செய்வோம்.
இது அற்புத விளக்கல்ல
அதிபலையும் பலையும் அல்ல
முன் ஜென்மங்களில்
கீழ்ப்படிவோரை மட்டுமே தெரிந்த
உங்களுக்கு அது புரியாது.
இது நீங்கள் பார்த்த பாலங்கள்
எல்லாவற்றையும் விட பெரிய பாலம்
பல கரைகளையும் இணைக்கும் பாலம்
நீங்கள் அளித்த உயரங்கள் அனைத்திலும் பெரிய உயரம்.
எங்களது பாபேல்.
உலகம் முழுதும் ஒரே மொழி பேசப்படுவதை
நீங்கள் கேட்கவில்லையா?
கடவுள் கடுப்பாகட்டும்;எங்களுக்கென்ன?

Comments

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை