ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் மணல் மீது வாழும் கடல் - கவிதைத் தொகுப்பு
மணல் மீது வாழும் கடல் - கவிதைகள்
குமரகுரு அன்பு - அகநாழிகை பதிப்பகம்
நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி
குமரகுரு அன்புவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘மணல் மீது வாழும் கடல்’. உலகின் துன்பங்களைக் கண்டு அதிர்ந்த சித்தார்த்தன் அதற்கான தீர்வினைத் தேடி துறவறம் மேற்கொண்டு தேடினான். ஆனால் கவிஞனுக்கு விதிக்கப்பட்டது அத்துயரங்களைத் தன் கவிதைகளில் பிரதிபலித்து, தன்னோடு சேர்ந்து வாசகனையும் இவ்வுலகத்தினையும் தேடத் தூண்டுவதுதானே. தன் கண் முன்னே தோன்றும் வாழ்வின் பல்வேறு துயரங்களையும் சமூக நலம் சார்ந்த அவதானிப்புகளையும் கவிதைகளின் கருவாக்கியுள்ளார் கவிஞர். அவரே சொல்வது போல் காத்திருப்பின் மௌனத்தினை உடைக்கும் கடவுச் சொல் தேடும் முயற்சிகள் இந்தக் கவிதைகள்.
//கடவுச்சொல்
காத்திருந்த நாட்களின்
மௌனம் உடைக்கும்
கடவுச்சொல் தெரியாமல்
இன்னும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
எண்ணங்களை
எங்கிருந்தோ வந்து
என் சொற்களை
என் எழுத்துக்களை
என் சத்தங்களை
தின்றுவிட்டு கடவுச்சொல்லை
போகும் வழியில் துப்பிச் செல்கிறாய்.//
குறையாத நம்பிக்கையின் குரலாக ஒலிக்கும் ‘தவக்களைய பாம்பு முழுங்கும் சத்தம்’ (மழை நாளில் ஒரு தவளை) மழை வருவதற்கான உறுதியான அறிகுறியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடும் செயலினைச் சொல்கிறது ஒரு கவிதை. இப்படி எவ்வளவு நம்பிக்கைகளையும் அறிதல்களையும் நாம் வழிவழியாக அடைந்து வந்துள்ளோம். இவைகளில் ஏற்படக்கூடிய தவறான அம்சங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு கொண்டவராக கவிஞர் இருப்பதையும் காணலாம்.
சமஉரிமைச் சமுதாயத்தினைக் கனவு காணக் காரணமாயிருக்கும் ‘கம்யூனிசம்’ ஈர்க்காத இளமை இருக்க முடியுமா? வலிமை மிகுந்த சுதந்திரமாகத் திரியும் மதம் பிடிக்காத யானையாக கம்யூனிசத்தினைக் கண்டு நிம்மதியடையும் கவிதை, கனவுகளை தக்க வைக்கத் தூண்டுகிறது.
//கம்யூனிசம்
தும்பிக்கையால்
மரத்தை ஒடித்து
தந்தத்தில் அமர்த்தி
நகரும் அதற்கு இன்னும்
மதம் பிடிக்கவில்லை.//
வேண்டுதல்களின் பெயரால் வணங்குதல் விதிமுறைகளின் பெயரால் மனிதன் செய்யும் ‘சர்க்கஸ்’ குழந்தை குட்டிகளுடன் இரசித்துக்கொண்டிருக்கும் கடவுள்களின் சித்திரம்கூட இளமை வேகத்தின் கிண்டல் தான். உண்டியலில் காசு போட்டு வெளியே வந்து, பாடிக் கொண்டிருக்கும் பார்வையற்றவனுக்குக் கொடுக்க சில்லறை இல்லாத நிலையினைச் சுட்டுவதும் இதே மனநிலையின் வெளிப்பாடு. ஆனால் இஸங்களின் கேளவிகளைச் சூறாவளி அடித்துச் சென்றபின் மலரும் மொக்கினையும் இவரே நமக்கு காட்டுகிறார்.
கடவுளைப் போன்றே ஆக்கியும் அழித்தும் விளையாடும் மழலைகள் (இல்லை மழலையைப் போல் கடவுளா?), பௌர்ணமியில் முட்டையிட்டு ஆதவன் அடைகாக்க அமாவாசையில் பொரியும் பேரிரவு, கைவிடப்பட்ட நாயின் பார்வையின் வழியாக வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்வு என வித்தியாசமான கோணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.
இந்தத் தொகுப்பில் கையாளப்பட்ட சில கருப்பொருட்கள் அண்மையில் வெளியாகி உள்ள தொகுப்பில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளன எனும் ஒரு விரைவுப் பார்வை சுவாரஸ்யமானதாக இருக்கும். முதல் தொகுப்பான மணல் மீது வாழும் கடலிலும் சமீபத்திய தொகுப்பான ஒரு உபரியின் கவிதைகளிலும் அப்பாவும் அவர் தன் மகனுக்கு பகிர்ந்தளிக்கும் அவதானிப்புகளும் பாடு பொருளாக இருக்கின்றன.
முதல் தொகுப்பில் தான் கேட்டவைகளை அவருடன் தேடித்திரிந்து கொண்டுவந்து தரும் அப்பாவின் உறுதி மிக்க கால்களை வியந்து நேசிப்பதோடு
//'தவக்களைய பாம்பு முழுங்குற சத்தம் கேட்குது
கண்டிப்பாக மழை வரும்டா தம்பி'
என்றவாறு பிள்ளையின் கைப்பிடித்து
வேகமாக நடக்கத் தொடங்குகிறேன்....
'தவளை பாவம்ல பா' என்ற அவனும்
இனி மழை நாள் தவளைச் சத்தம் கேட்டு
வீட்டுக்கு வேகமாக நடப்பான்.//
தன் நம்பிக்கைகளையும் அறிதல்களையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தியதில் நிம்மதியும் மகிழவும் கொள்கிறார்.ஆனால், அண்மைத் தொகுப்பில் இதுவே
//அன்றொரு இரவு
என் விரல்களை நீங்கள்
இறுகப் பிடித்து நடந்தபடியே
கதைசொல்லி கொண்டே நடந்தோமே
அப்பா.
அப்போது எனக்கு அது வெறும் கதை!
அப்பா சொன்ன கதை ஆதலால்
மறக்க முடியாத கதை.
உங்கள் அப்பா உங்களுக்கும்
அவரின் அப்பா அவருக்கும்
என்ற வரலாற்று கதை அது என்று
எனக்கு அப்போது புரியவில்லை//
என அப்பா சொன்னாலும் அதையும் கேள்விக்குள்ளாக்கி, சுயமாக சிந்தித்து முடிவினை மேற்கொள்ளும் முதிர்வினை அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல்
//உச்சத்திலிருப்பவன்
மிச்சத்தை வைத்திருப்பவனின்
அத்தனையையும் உருவும் அக்கதைகளை
நான் என் பிள்ளைக்கு
சொல்லாமல் விடப்போகிறேன் அப்பா.
மன்னித்தாலும் சரி...
மன்னிக்காவிடினும்.....//
என தீர்க்கமான தன் முடிவினை அறிவிக்கவும் செய்கிறார். இது வரவேற்கத் தக்க முன்னேற்றம் தானே.
ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->

Comments
Post a Comment
Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்